
பருவநிலை மீள்தன்மையுடன் கூடிய எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கு டெல்லி பாரத் மண்டபத்தில் நிறைவடைந்தது. நீடித்த நடவடிக்கைகள், ஒத்துழைப்பு, கொள்கை அடிப்படையிலான பருவநிலை செயல்பாடுகள், மீள்தன்மை ஆகியவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கான அழைப்பு இக்கருத்தரங்கில் விடுக்கப்பட்டது.

நிறைவு விழாவில் பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பருவநிலை சவால்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பயணத்தை எடுத்துரைத்தார். வெப்ப அலைகள், விவசாயத்தில் நீர் பற்றாக்குறையின் தாக்கம், பருவநிலைக்கேற்ற சிறந்த சுகாதார அமைப்புகளை உருவாக்குவதற்கான அவசரம், புதுமையான தீர்வுகள் போன்ற முக்கியமானவற்றிகளில், பருவநிலை நடவடிக்கையின் பன்முகத் தன்மையை அவர் வலியுறுத்தினார்.
21-ம் நூற்றாண்டின் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தக் கருத்தரங்கின் கருத்துகள், பரிந்துரைகளை பொருத்தமான வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். கடந்த நான்கு நாட்களில், பருவநிலை அறிவியல், பொது சுகாதாரம், தொழிலாளர் நலன், நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அவசர சவால்கள், மீள் தன்மையுடன் கூடிய எதிர்காலத்திற்கான பாதைகள் குறித்து விவாதிக்க இந்த கருத்தரங்கம் ஒரு ஆற்றல்மிக்க அறிவு பகிர்வு தளமாக செயல்பட்டது.