ஒடிசாவில் 24 ஆண்டு கால பிஜு ஜனதாதள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜகவின் அசத்தல் வெற்றி!

ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் 24 ஆண்டு கால பிஜு ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது இதனால் இந்தியாவில் அதிக ஆண்டு காலம் முதல் அமைச்சர் பதவி வகித்தவர் என்ற சாதனையை பெரும் வாய்ப்பையும் நவீன் பட்நாயக் இழந்தார்.

Update: 2024-06-05 05:38 GMT

நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நான்கு கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்த பிஜூ பட்நாயக்கின் மகன் தான் நவீன் பட்நாயக். இவர் தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் பிஜு ஜனதா தளம் கட்சியை தொடங்கி கடந்த 2000 ஆண்டு ஒடிசாவில் ஆட்சியை பிடித்து முதல் மந்திரியாக பதவியேற்றார். அதன் பிறகு தொடர்ந்து நடைபெற்ற நான்கு தேர்தலிலும் வெற்றி பெற்று ஒடிசா மாநிலத்தில் ஐந்து முறை முதல் மந்திரி பதவியை அலங்கரித்தார்.

தற்போது 77 வயதாகும் நவீன் பட்நாயக் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆறாவது முறை முதல் மந்திரியாக பதவி ஏற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் பிஜு ஜனதா தளம் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு கட்சிகளும் தனித்தனியாக களம் இறங்கின. நவீன் பட்நாயக் தனது செயலாளர் ஆக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே பாண்டினை பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்த்ததுடன் அவரை பிரச்சார தளபதியாக்கி தேர்தலை சந்தித்தார்.

இந்த வியூகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது பாஜக. ஒடிசா மண்ணை வேற்று மாநிலத்தை சேர்ந்தவருக்கு தாரை வார்ப்பதா என்று கேள்வி எழுப்பியது. அத்துடன் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவியை பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தியது பாஜக. இந்த விவகாரமும் விஸ்வரூபம் எடுத்தது. அத்துடன் முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்தும் பாஜக கேள்வி எழுப்பியது.

இதையே பிரச்சார களத்தில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கையில் எடுத்தனர். இது ஒடிசா மாநில மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அந்த மாநில அரசியல் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று வெளியான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிஜூ ஜனதா தளத்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தேர்தல் முடிவு வெளிவர தொடங்கியதிலிருந்து ஜனதா தளம் பின்னடைவை சந்தித்தது. பா.ஜனதா வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி முகத்தில் இருந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 74 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 80 இடங்களைப் பெற்றது.பிஜூ ஜனதா தளம் 49 இடங்களையும் காங்கிரஸ் 14 இடங்களையும் மற்றவர்கள் நான்கு இடங்களையும் பெற்றனர் .இதன் மூலம் ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.


SOURCE :DAILY THANTHI

Tags:    

Similar News