பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 3,029 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்ப்பு!

பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 3,029 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2024-08-03 17:45 GMT

'ஆயுஷ்மான் பாரத்' பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 3,029 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே. பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மக்களவையில் கேள்வி நேரத்தில் தனது துறை சார்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே. பி. நட்டா பேசியதாவது:-

தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பலன்களை மூன்றாம் பாலினத்தவர்களும் நீட்டிக்கும் வகையில் தேசிய சுகாதார ஆணையம் மற்றும் சமூக நீதி அதிகாரம் அளித்தல் அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இதில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 3,029 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் பணமில்லா சுகாதார சேவைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான குறிப்பிட்ட சிகிச்சைகளை பெற முடியும் என்றார்.

29,000 மருத்துவமனைகள் இணைப்பு: ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 30-ம் தேதி வரை 12,625 தனியார் மருத்துவமனைகள் உட்பட 29,000 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள பயனாளிகளுக்கு சிகிச்சை வழங்க இந்த மருத்துவமனைகள் அனைத்தும் உள்ளன என்றார்.

ரூ.28000 கோடி சேமிப்பு:

பிரதம மந்திரி பாரதிய ஜன ஔஷதி பரியோஜனா திட்டத்தின் கீழ் மலிவு விலையில் விற்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களால் இதுவரை ரூபாய் 28000 கோடிக்கு மேல் மருத்துவ செலவுகளை நோயாளிகள் சேமித்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஜன ஔஷதி கேந்திராக்களில் 1,965 மருந்துகள் மற்றும் 235 மருத்துவ சாதனங்கள் 52 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றது என்றார்.


SOURCE :News

Tags:    

Similar News