சரவணக்குமார் என்ற அப்துல்லாவால் மாட்டிய உதயகுமார் என்ற யூசுப் - தேனியில் NIA சோதனை!

Update: 2021-07-26 10:46 GMT

தேனி மாவட்டத்தில் பிரியாணி கடை நடத்திவரும் யூசுப் அஸ்லாம் என்ற உதயகுமார் வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் வடக்கு ரத வீதியில் பிரியாணிக் கடை நடத்தி வருபவர் யூசுப் அஸ்லாம் என்ற உதயகுமார். மதுரையை சேர்ந்த இவர் சின்னமனூரைச் சார்ந்த இஸ்லாமிய பெண் ஒருவரைக் காதலித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளார்.

திருமணத்திற்காக மதம் மாறிய இவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்களின் அடிப்படையில் இவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த சரவணக் குமார் என்ற அப்துல்லா என்பவர் சமூக வலைதளங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்ததால் மதுரை காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் அளித்துள்ளனர்.

சரவணக்குமார் என்ற அப்துல்லாவுடன் தொடர்புடையவர்கள் சிலரிடம் விசாரணை செய்து வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அதன் ஒரு பகுதியாக பிரியாணி கடை நடத்தி வந்த யூசுப் அஸ்லாம் வீட்டில் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யூசுப்பின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களைக் கொண்டு சின்னமனூர் காவல் நிலையத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : TamilHindu

Similar News