கொரோனா ஊரடங்கு.. யார் வீட்டில் இருப்பது ? 2 மனைவியை கட்டிய கணவருக்கு வந்த சோதனை.!

கொரோனா ஊரடங்கு.. யார் வீட்டில் இருப்பது ? 2 மனைவியை கட்டிய கணவருக்கு வந்த சோதனை.!

Update: 2020-04-11 08:04 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரு கிழக்கு மண்டல காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 35 வயதுடையவர் வசித்து வருகிறார்.

இவர் அந்தப்பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இதனையடுத்து தனது முதல் மனைவிக்கு தெரியாமல், கடந்த 2019ம் ஆண்டு மற்றொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது.

தொழிற்சாலை சம்பந்தமாக வெளியே சென்று வருவதாக முதல் மனைவி வீட்டில் கூறிவிட்டு அந்த நபர் 2-வது மனைவி வீட்டில் அடிக்கடி தங்கி வந்துள்ளார்.

இந்த சம்பவம் எப்படியோ முதல் மனைவிக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முதல் மனைவி பெங்களூரு மாநகர கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மகளிர் உதவி மையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் 2 மனைவிகளை திருமணம் செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.

இதனை அறிந்த அந்த நபர் தனது முதல் மனைவி மற்றும் 2வது மனைவியின் பெற்றோருடன் சமாதானம் பேசியுள்ளார்.

நான் தொழிற்சாலை நடத்திவருகிறேன் என்னை போலீசார் கைது செய்தால் சமூதாயத்தில் அவப்பெயர் உண்டாகும்.

அது மட்டுமின்றி தொழில் பெருமளவு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக நான் முதல் மனைவி வீட்டில் ஒருவாரம், 2வது மனைவி வீட்டில் அடுத்த ஒரு வாரம் தங்குகிறேன் என்று பேசியுள்ளார்.

இதனை கேட்டு 2 மனைவிகளும், அவர்களது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி முதல் மனைவி வீட்டில் ஒரு வாரம், 2-வது மனைவி வீட்டில் அடுத்த வாரம் என்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

இதனால் முதல் வாரத்தை கடந்தும் அந்த நபர் 2-வது மனைவி வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஒரு வாரம் முடிந்த பின்னர் அவரது முதல் மனைவி தனது வீட்டுக்கு வாங்க என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த நபர், ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் இருப்பதால் என்னால் வெளியில் வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த அவரது முதல் மனைவி இது தொடர்பாக மறுபடியும் மகளிர் உதவி மையத்தில் புகார் அளித்தார்.

பெண்ணின் புகாரை தொடர்ந்து மகளிர் உதவி மைய அதிகாரிகள் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.

அப்போது அவர் ஊரடங்கு உத்தரவால் முதல் மனைவி வீட்டிற்கு செல்ல முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து முதல் மனைவியிடம் மகளிர் உதவி மையத்தின் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறியுள்ளனர்.

அதே சமயத்தில் 2-வது மனைவியும் இந்த கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நேரத்தில் எனது கணவர் வெளியே செல்லக் கூடாது என்றும், எனது வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த நபர் நிலைமையை சமாளிப்பதற்காக தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த பிரச்சனை இப்போதைக்கு எந்த மனைவியின் வீட்டில் இருப்பது என்ற விவகாரத்தில் அந்த நபருக்கு சுமுக தீர்வு கிடைத்துள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

Similar News