குடிக்க அனுமதிக்காததால் பெற்ற தாயை சுத்திலால் அடித்து கொன்ற திண்டுக்கல் வாலிபர் !

குடிக்க அனுமதிக்காததால் பெற்ற தாயை சுத்திலால் அடித்து கொன்ற திண்டுக்கல் வாலிபர் !

Update: 2019-11-09 04:16 GMT

திண்டுக்கல் அருகே பெற்ற தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது. திண்டுக்கல் மாலைப்பட்டி அருகே உள்ள அச்சராஜக்காபட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயா (வயது 45). இவர் தனது வீட்டிலேயே நெசவு வேலை செய்து வந்தார்.


இவர்களுக்கு பாலாஜி (30), கண்ணன் (23) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் கண்ணன் வேலைக்கு செல்லாமல் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் அவரை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த கண்ணன் மீண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையானார்.



இந்தநிலையில் போதை பழக்கத்திற்கு அடிமையானால் தனது மகனின் வாழ்க்கை பாழாகிவிடும் என்று எண்ணிய அவரது தாய் ஜெயா, நேற்று மீண்டும் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துவிட கண்ணனை அழைத்துள்ளார். அதற்கு கண்ணன் வர மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


மேலும் மதுபோதையில் இருந்த கண்ணன் ஆத்திரமடைந்து, அருகில் இருந்த சுத்தியலை எடுத்து பெற்ற தாய் என்று பாராமல் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜெயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் மற்றும் போலீசார், ஜெயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Similar News