ஆயுஷ் அமைச்சகத்தை உலகிற்கு முன் உதாரணமாக நிலை நிறுத்திய மோடி அரசு..

Update: 2023-12-25 02:09 GMT

ஆயுஷ் அமைச்சகம் தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் தொலை நோக்குத் திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை செயல் படுத்துவதில் 2023-ம் ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆண்டு இந்திய பாரம்பரிய மருத்துவ கலாச்சாரம் உலக அளவில் அதிகம் பரவியுள்ளது. 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் இதோ, ஆயுஷ் அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டின் முதல் சிந்தனை முகாம் பிப்ரவரி மாதம் அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயுஷ் மருத்துவ முறையில் டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம், எதிர்கால முன்முயற்சிகள், சவால்கள், ஆயுஷ் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஆயுஷ் மருந்து தொழில்கள், ஆயுஷ் தயாரிப்புகளைத் தரப்படுத்தல், பொது சுகாதாரத்தில் ஆயுஷ், போன்றவை குறித்த அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.


பாரம்பரிய மருந்துகள் தொடர்பான அம்சம் புதுதில்லி ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டு பிரகடனத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் குவஹாத்தியில் மார்ச் மாதம் நடைபெற்ற பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு மற்றும் கண்காட்சியில் ரூ. 590 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த 2023-ம் ஆண்டு சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். முன்னெப்போதும் இல்லாத வகையில், இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் இதில் நிகழ்த்தப்பட்டன.


9-வது சர்வதேச யோகா தினத்தின் சிறப்பம்சமாக ஓஷன் ரிங் ஆஃப் யோகா என்ற தனித்துவமான அம்சம் நடத்தப்பட்டது. இதில் 19 இந்திய கடற்படை கப்பல்களில் சுமார் 3500 கடற்படை வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச கடல்களில் யோகா தூதர்களாக 35,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்தனர். ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான யோகா இந்த ஆண்டு யோகா தினத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். ஆயுஷ் அமைச்சகம் பாரம்பரிய மருத்துவத் துறையில் உலக சுகாதார அமைப்புடன் திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நடவடிக்கை உலகளாவிய உத்தி சார் செயல்திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News