தமிழ் நாட்டில் ரயில்வே துறை மிக வேகமாக வளர்ச்சி.. மத்திய அரசு முன்னுரிமை..

Update: 2024-02-29 02:39 GMT

தமிழ்நாட்டில் ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது என்று மத்திய பால்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார். நாடு முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, புதுதில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மின் தூக்கி வசதி, தானியங்கி படிக்கட்டுகள், ரயில்வே கோச் வடிவில் உணவகம், வாகனம் நிறுத்தும் வசதி, பயணச் சீட்டு அலுவலகம் ஆகியவை இங்கு அமைக்கப்பட உள்ளன.


மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் திரு எல். முருகன் நேரில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், இந்திய ரயில்வே துறையில் இன்று மிக முக்கியமான நாள் என்றும் நாடு முழுவதும் 41 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே வளர்ச்சி பணிகளை பிரதமர் தொடங்கி வைத்துள்ளதாகவும் கூறினார். மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்காக அம்ரித் பாரத் திட்டத்தில் சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தவிர மேட்டுப்பாளையம் பகுதியில் ரயில் பாதைகளை சீரமைக்க சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


தமிழ்நாட்டில் மட்டும் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே சென்னை எழும்பூர், கன்னியகுமரி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். தமிழ் நாட்டில் ரயில்வே துறை மிக வேகமாக வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்து வருகிறது என்று அவர் கூறினார். தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு இந்த நிதியாண்டில் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் அதிவேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் ஏழு வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு பயணித்து வருகிறது என்று எல்.முருகன் அவர்கள் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News