கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தில் சி.பி.ஐ விசாரணை கட்டாயம் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தில் மாநில போலீசார் விசாரணையில் உண்மைகள் வெளிவராது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2024-06-24 08:21 GMT

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தில் மாநில போலீசார் விசாரணையில் உண்மைகள் வெளிவராது என்பதால் சிபிஐ விசாரணை தேவை என மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று இது தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

தமிழ்நாடு மாநிலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் 200க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இத்தனை மரணங்கள் நிகழ்ந்த பிறகும் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டாஸ்மாக் மது கடைகளில் மது வகைகள் தாராளமாக கிடைக்கும்போது விஷ சாராயம் எப்படி கிடைக்கிறது என தெரியவில்லை. எனவே இந்த விஷயத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் விவாதத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை .விஷ சாராய மரணங்களுக்கும் தமிழகத்தை ஆளும் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டுகிறேன்.

எனவேதான் சிபிஐ விசாரணை வேண்டுமென பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன். அப்போதுதான் உண்மைகள் வெளியே வரும். மாநில போலீசாரின் விசாரணையில் உண்மைகள் முழுமையாக வெளியே வராது .தமிழ்நாட்டில் மது விலக்கு நீக்கியதே திமுக தான் .தற்போது தமிழ்நாட்டில் மது ஆறாக ஓடுகிறது. குடியிருப்பு பகுதியில் விஷ சாராயம் காய்ச்சியதுதான் வேதனை தருவதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :Newspaper 

Tags:    

Similar News