அதிரடியாக அமலுக்கு வந்த மோடியின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்!

ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு மத்திய அரசின் அரசு இதழில் கடந்த டிசம்பரில் வெளியானது .இந்நிலையில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றன.

Update: 2024-06-30 11:56 GMT

புதிய குற்றவியல் சட்டங்களில் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகளை பதிவு செய்யும் தற்போதைய குற்றவியல் கண்காணிப்பு அமைப்புகளின் பயன்பாட்டில் 23 செயல்பாட்டு புதுப்பிப்புகளை தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சட்டங்களின் கீழ் மின்னணு முறையில் சம்மன் நோட்டீஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக இஷாக்ஷியா, நியாயஷ்ருதி, இசம்மன் ஆகிய மூன்று செயலிகளை தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ளது.

நாளை மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் மூன்று புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா ஆகியோர் இந்த சட்டங்களை அவசரகதியில் அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலவையில் உள்ளது. பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் புதிய சட்டங்களை நாளை முதல் மோடி தலைமையிலான பாஜக அரசு அமல்படுத்த உள்ளது. ம.பி மாநிலம் , குவாலியர் மாவட்ட போலீஸ் எஸ்.பி தர்ம வீர் சிங் கூறுகையில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபரும் தங்களது வீட்டில் இருந்து கொண்டே இ.எப்.ஐ.ஆர் மூலம் புகாரை பதிவு செய்யலாம் .

குறிப்பிட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்றில்லாமல் எங்கிருந்தும் எந்த மாநிலத்திலும் புகார் அளிக்கலாம். ஜீரோ எஃப்.ஐ.ஆர் முறையில் புகாரை அளிக்கலாம் .சட்டத்தின்படி 90 நாட்களுக்கு பாதிக்கப்பட்டவர் அல்லது புகார்தாரருக்கு வழக்கின் முன்னேற்றம் குறித்து விசாரணை அதிகாரி தெரிவிப்பார் என்றார்.


SOURCE :News

Tags:    

Similar News