கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் தி.மு.க பெண் கவுன்சிலர்.. அராஜகம் என பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு..

Update: 2024-07-14 16:07 GMT

தூத்துக்குடியில் அண்ணன்- தங்கையின் சொத்து தகராறு ஏற்கனவே தூத்துகுடி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்க தங்கையின் ஆவணமற்ற வீட்டிற்கு திமுக கவுன்சிலரின் துணையோடு குடிநீர் பைப்லையின் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் மனைவியை தாக்கி, தகாத வார்த்தையில் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் திமுக கவுன்சிலர் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டதற்காக அவர் மீது குற்றச்சாட்டு தற்போது எழுந்து இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் லயன்ஸ் டவுன் 4வது தெருவை சேர்ந்த ராஜ் என்பவர் அதே பகுதியில் இரண்டு சென்ட் நிலம் வைத்திருந்தார். இதற்கிடையே, சில வருடங்களுக்கு முன் ராஜ் இறந்துவிட்ட நிலையில், அந்த வீட்டில் ராஜின் மனைவி ஜெர்மனி மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில், இந்த வீட்டிற்கு அருகே உள்ள ராஜுக்கு சொந்தமான வீட்டில் ராஜின் தங்கை பிரிண்டால் வசித்து வந்துள்ளார். திடீரென பிரிண்டால் அந்த இடத்தை தனது இடம் எனக் கூறி அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ராஜ் தரப்பும், ராஜ் தங்கை தரப்பும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதனையடுத்து, இந்த வழக்கு ராஜ் தரப்புக்கு சாதகமாக முடிவடைந்த நிலையில், பிரிண்டால் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடுக்குச் சென்றுள்ளார். எனவே, இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கும் நிலையில், வீட்டுக்கு சம்பந்தம் இல்லாத பிரிண்டால், 47வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் ரெக்சிலின் ஏற்பாட்டின் பேரில் முறைகேடாக அரசு அனுமதியில்லாமல் குடிநீர் வசதி அமைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குடிநீர் பைப் அமைக்க குழி தோண்டியுள்ளனர்.


மேலும் பைப்லைன் அமைக்க தோண்டிய குழியில் ராஜின் மனைவி இறங்கி இதை செய்யக்கூடாது என்று தடுக்க முயன்றார். அப்போது அவரை தகாத வார்த்தையில் திமுக பெண் கவுன்சிலர் திட்டியதாகவும், மேலும் அவருடன் சேர்ந்து சிலர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த திமுக பெண் கவுன்சிலர் ரெக்சில், ஜெர்மனியை தகாத வார்த்தைகளால் திட்டியதை பார்த்துக் கொண்டிருந்த சிலர் அதை செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக ராஜின் மகள் கூறும் பொழுது, "இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திமுக கவுன்சிலரின் இந்த அராஜகத்திற்கு மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.

Input & Image courtesy: The Commune News

Tags:    

Similar News