மோடி அரசின் கீழ் சிறப்பாக இயங்கும் ரயில்வே நிதிநிலை!

ரயில்வே துறையில் நிதிநிலை சிறப்பாக உள்ளது.ரயில்வே துறையில் மேலும் ஒரு லட்சம் பேர் நியமிக்கப்பட உள்ளனர் என்று மாநிலங்களவையில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.;

Update: 2025-03-18 12:00 GMT
மோடி அரசின் கீழ் சிறப்பாக இயங்கும் ரயில்வே நிதிநிலை!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று ரயில்வே துறை மானிய  கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது ரயில்வே துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர்.இதற்கு பதிலளித்து ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:-

ரயில்வேயில் வேலைவாய்ப்பு வழங்கவில்லை என பல உறுப்பினர்கள் தெரிவித்தனர். எப்படி தாங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை அவையில் கூற முடியும்? ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு லட்சம் பேரை நியமிப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது. ரயில்வே பணி நியமனங்கள் வெளிப்படையாக நடந்து வருகின்றன. மகா கும்பமேளாவின் போது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த அனைத்து தரவுகளும் சேகரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து உயர்மட்ட குழு விசாரணை நடந்து வருகிறது.

அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்த இரயில்வேயும் தானியங்கி பாதுகாப்பு தொழில்நுட்பமான கவாச் அமைப்புக்குள் கொண்டுவரப்படும். மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா போன்ற எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் கிடப்பில் உள்ள அல்லது தாமதமான ரயில்வே திட்டங்களை விரைவில் முடிக்க ஒத்துழைப்பு கொடுக்கப்படும். சிறப்பான செயல்பாடு காரணமாக ரயில்வே தனது செலவினங்களை சொந்தமாகவே எதிர்கொள்ளும் திறன் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ரயில்வே நிதிநிலை சிறப்பாக உள்ளது. அண்டை நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ரயில் கட்டணம் குறைவாக உள்ளது.350 கிலோமீட்டர் பயணத்திற்கு இந்தியாவில் ரூபாய் 121 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் இது பாகிஸ்தானில் 400 ஆகவும் இலங்கையில் 413 ஆகவும் உள்ளது.சரக்கு போக்குவரத்தில் வருவாய் பெருக்கிக் கொண்டு பயணிகளுக்கு சலுகை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Tags:    

Similar News