உக்ரைன் மீது நடத்தப்படும் போரை நிறுத்த வேண்டும்: ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!
உக்ரைன் மீது நடத்தப்பட்டு வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், பேச்சுவார்த்தைகள் மூலமாகவே பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
உக்ரைன் நாட்டு மீது ரஷ்யா படைகள் நேற்று அதிகாலை முதல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் கிழக்கு உக்ரைன் பகுதியில் ஆக்ரோஷமான போரில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இதுவரைக்கும் அங்கு 100க்கும் மேற்பட்டோர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அது மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் தஞ்சம் அடைந்து வருவதை காண முடிகிறது. இதனிடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய முன்வர வேண்டும் என்று உக்ரைன் முன்வைத்தது. பிரதமர் மோடி உட்பட சில நாட்டு தலைவர்களிடம் மட்டுமே ரஷ்ய அதிபர் புடின் மரியாதை வைத்துள்ளார். எனவே பிரதமர் மோடி உக்ரைன் விவகாரத்தில் தலையிட வேண்டும் என அந்நாட்டு தூதரகம் வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேற்று இரவு தொலைபேசிய வாயிலாக தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அமைதியான முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தினால் மட்டுமே ரஷ்யா, மற்றும் நேட்டோ இடையில் ஏற்பட்டிருக்கும் வேறுபாடுகளை களைய முடியும் என்றார். போரை உடனடியாக கைவிட்டுவிட்டு தூதரக முறையில் பேச்சுவார்த்தைகளை தொடரவேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்பது பற்றியும் பிரதமர் மோடி எடுத்து கூறியுள்ளார்.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: Hindustan Times