இந்திய உயிர்களை பணயம்வைத்து, தடுப்பூசி வெளிநாட்டிற்கு ஏற்றுமதியா? மத்திய அமைச்சர் விளக்கம்!
By : Bharathi Latha
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்திய மக்களின் உயிரை பணயம் வைத்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய ஹர்ஷவர்தன், மிக உயர்ந்த மட்டத்தில் உள்ள வல்லுநர்களும் அரசாங்கக் குழுவும் இது குறித்து ஒரு விவேகமான சமநிலையை பேணி வருவதாகக் கூறினார். இதுவரை நாடு முழுவதும் 3.29 கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலவையில் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் தொடர்ந்து தினசரி புதிய பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் புதிய பாதிப்புகளில் 79.73 சதவீதம் கடந்த 24 மணி நேரத்தில் இந்த மாநிலங்களிலிருந்து மட்டுமே பதிவாகியுள்ளன.
இந்தியாவின் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் ஆகிய கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இந்தியா அங்கீகரித்ததிலிருந்து, அரசாங்கம் லட்சக்கணக்கான டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை மானிய உதவியின் கீழ் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது. சில நாடுகள் இந்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை செலுத்தி பெற்றுக்கொண்டுள்ளன.
மேட்-இன்-இந்தியா கொரோனா தடுப்பூசிகளைப் பெறும் நாடுகள் பின்வருமாறு, பங்களாதேஷ், மியான்மர், நேபாளம், பூட்டான், மாலத்தீவுகள், மொரீஷியஸ், சீஷெல்ஸ், இலங்கை, பஹ்ரைன், பிரேசில், மொராக்கோ, ஓமன், எகிப்து, அல்ஜீரியா, தென்னாப்பிரிக்கா, குவைத், யுஏஇ, ஆப்கானிஸ்தான், பார்படாஸ், டொமினிகா, மெக்சிகோ, டொமினிகன் குடியரசு, சவுதி அரேபியா, எல் சால்வடோர், அர்ஜென்டினா, செர்பியா, ஐ.நா. சுகாதார ஊழியர்கள், மங்கோலியா, உக்ரைன், கானா, ஐவரி கோஸ்ட், செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ், செயின்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ், சுரினாம், ஆன்டிகுவா & பார்புடா, டி.ஆர். காங்கோ, அங்கோலா, காம்பியா, நைஜீரியா, மொசாம்பிக், எத்தியோப்பியா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவிடமிருந்து தடுப்பூசியை பெற்றுள்ளது. மேலும் பல நாடுகளும் தடுப்பூசி வழங்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.