ஐக்கிய நாடுகள் சபையில் இராஜதந்திர போக்கை கையாண்டு இலங்கையை எதிர்த்த இந்தியா! ஈழத்தமிழர்கள் மத்தியில் குவியும் பாராட்டு!
By : Muruganandham
ஐக்கிய நாடுகள் சபையில் நடுநிலையாக செயல்பட்டு, இலங்கைக்கு எதிரான நாடுகளை ஒன்று திரட்டி, ஈழத்தமிழர்கள் பக்கம் நியாயம் தேடிக்கொடுத்த பிரதமர் மோடிக்கு, கனடா வாழ் ஈழத்தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஈழத்தமிழர்கள் சார்பாக, மதிப்புக்குரிய இந்தியப் பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிற்கும், 140 கோடி இந்திய மக்களிற்கும் மற்றும் ஆதரவாகவும் நடுநிலையாகவும் வாக்களித்த மற்றைய நாடுகளிற்கும், கோடான கோடி நன்றிகள்.
இன்று மார்ச் 23ம் திகதி, ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மனிதவுரிமை விடையமாக இடம்பெற்ற வாக்கெடுப்பில், இந்தியா தனது நிலைப்பாட்டில் நடுநிலையாக நின்று, மற்றைய பல நட்பு நாடுகளை ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகவும் நடுநிலையிலும் நிறுத்தி, இராஜதந்திர நகர்வை செய்துள்ளது.
மொத்தமாக 47 வாக்குகளில், ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக 22 வாக்குகளும், இலங்கை அரசுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் மற்றும் 14 வாக்குகள் நடுநிலையாகவும் அமைந்தது.
நேற்றைய தினம் இலங்கைப் ஜனாதிபதி இந்திய பிரதமரோடு தொலைபேசியில் பேசி, தங்களிற்கு வாக்களிக்க வேண்டுமென்ற கோரிக்கை வைத்தும், அதை இந்தியா நிராகரித்தது மிகச் சிறப்பு.
சிங்கள பெளத்த இலங்கை அரசு சீனாவின் கை பொம்மையாக இருந்தாலும், ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் இந்தியாவிற்கு ஆதரவாகத் தான் இருப்பார்கள்" என்று அதில் கூறியிருந்தனர்.