ககன்யான் திட்டம்: ரஷ்யாவில் பயிற்சியை நிறைவு செய்த இந்திய விண்வெளி வீரர்கள்!
By : Bharathi Latha
இந்தியாவின் முதல் மனிதர்களை கொண்ட விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டதாக செவ்வாயன்று ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டு நிறைவுப் பெறும் 2022 ஆம் ஆண்டில், இந்த ரூ.10,000 கோடி லட்சிய திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது விண்வெளி பயிற்சியை வெற்றிகரமாக முடித்த இந்திய விண்வெளி வீரர்களுடன் மாநில கார்ப்பரேஷன் ரோஸ்கோஸ்மோஸின் பொது இயக்குநர் டிமிட்ரி ரோகோசின் வியாழக்கிழமை ஒரு சந்திப்பை நடத்தியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் D.B. வெங்கடேஷ் வர்மா மற்றும் விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதில் பங்கேற்ற மாநில கார்ப்பரேஷன் ரோஸ்கோஸ்மோஸின் துணை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கிளாவ்கோஸ்மோஸ் நிறுவனம் (ரோஸ்கோஸ்மோஸ் ஸ்டேட் கார்ப்பரேஷனின் ஒரு பகுதி) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் ஆளில்லா விண்வெளி விமான மையம் ஆகியவற்றுக்கு இடையே விண்வெளிப் பயணத்திற்காக இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் 2019 ஜூன் 27 அன்று கையெழுத்தானது.
பிப்ரவரி 10, 2020 அன்று யூரி ககரின் பெயரிடப்பட்ட விண்வெளி பயிற்சி மையம் இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க தொடங்கியது. COVID-19 நோய்த்தொற்று பரவ தொடங்கியதால் மார்ச் மாத இறுதியில் பயிற்சி இடைநிறுத்தப்பட்டது. பின்னர் அது மே மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது. இப்போது, இந்த பயிற்சி நிறைவடைந்துள்ளது. இதற்கடுத்தக்கட்ட பணிகள் என்ன என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.