இனி உங்கள் படைப்பு மக்களிடத்தில் பேசிக்கொள்ளும் மோகன் ஜி அவர்களே - இயக்குனர் தங்கர்பச்சானின் பாராட்டு

"இனி உங்கள் படைப்பு மக்களிடத்தில் பேசிக்கொள்ளும் மோகன் ஜி அவர்களே" என ருத்ரதாண்டவம் படம் பார்த்துவிட்டு இயக்குனர் தங்கர்பச்சான் மோகன் ஜி'யை பாராட்டியுள்ளார்.
இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படம் நாளை வெளியாக இருக்கிறது. இதனையடுத்து பல பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் புகழ்பெற்ற இயக்குனர் தங்கர்பச்சான் ருத்ரதாண்டவம் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.
இதனை கடிதமாக வெளியிட்டுள்ள அவர் கூறியதாவது, "இயக்குநர் மோகன் அவர்களுக்கு வணக்கம்.
என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை; தங்களின் "ருத்ர தாண்டவம்" திரைப்படத்தை கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதை தெரிவிக்கிறேன். ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையை செய்தது போல் இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை என உணர்கிறேன்.
உங்களின் முந்தைய திரைப்படம் "திரௌபதி" பெரும் வணிக வெற்றியை அடைத்திருந்தாலும் எனக்கு அது பிடித்தமானதாக இல்லை. அத்துடன் ருத்ர தாண்டவம் பார்த்து பாராட்டுபர்களின் பட்டியலையும் அவர்களின் பாராட்டுகளையும் காண நேர்ந்த பொழுது நான் இந்தப் படத்தை பார்த்துதான் ஆக வேண்டுமா எனவும் நினைத்தேன். படம் பார்த்து முடிந்ததும் அவ்வாறு எண்ணியதற்காக இப்பொழுது மனம் வருந்துகிறேன்.
மக்கள் நாள்தோறும் சந்திக்கின்ற காண நேர்கின்ற இன்றைய சிக்கல்களைத்தான் காட்சிகளாக கருத்துகளாக முன் வைக்கின்றீர்கள் என்பதால் இப்படத்தை பார்த்தவர்களால் மற்றவர்களுடன் இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. எப்படியாவது இத்திரைப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகமாகவே நீங்கள் பேசுவதை காண்கிறேன். இனி அது தேவையில்லை. இனி உங்களின் படைப்பு மக்களிடத்தில் பேசிக்கொள்ளும்,
மக்களின் பலவீனத்தை பணமாக்குவதற்காக பொழுதுப்போக்கு எனும் போதைப்பொருளை திரைப்படங்களாக உருவாக்கி சமூகத்தை பின்னோக்கி சீரழிப்பவர்களுக்கிடையில் விழிப்புணர்வைத் தூண்டும் உங்களின் ருத்ர தாண்டவத்தை மக்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்" என அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.