கைதி - 2 கண்டிப்பா இருக்கு - தயாரிப்பாளர் உத்தரவாதம்!

"கைதி 2" கண்டிப்பாக உருவாகும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான அனைத்து இடங்களிலும் படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.
இப்படத்தின் வெற்றிக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தியும் 'கைதி 2' கண்டிப்பாக உருவாகும் என்று கூறினார். முதல் பாகத்தின் இறுதியிலிருந்து 2-ம் பாகம் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார். பின்னர் அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை.
இந்நிலையில் 'கைதி 2' குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பதிலளிக்கையில், "கார்த்தி சார், லோகேஷ் கனகராஜ் இருவருமே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தவுடன் கண்டிப்பாக 'கைதி 2' உருவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.