திண்டுக்கல்லில் நடைபெற்ற விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு நிறுத்தம்.!
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்காததால், திண்டுக்கல்லில் நடைபெற்ற நடிகர் விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்காததால், திண்டுக்கல்லில் நடைபெற்ற நடிகர் விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகின்ற சூழலில் தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பு விதிகளை அரசு வெளியிட்டது. அதில் கட்டாயம் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவைகள் அடங்கும். ஆனால் இந்த உத்தரவுகளை பலர் கடைப்பிடிக்காமல் உள்ளதால் தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது. இதனால் மாவட்டம் தோறும் அதிகாரிகள் இதற்கு என்று நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விஜய்சேதுபதி படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது முறையான கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இது பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களுக்கு, படக்குழுவை சேர்ந்த நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார். இதனால் படக்குழுவுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களிடம், நடிகர் விஜய்சேதுபதி சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டனர். அது மட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத படக்குழுவினருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மிரட்டல் விடுத்த நபர் மன்னிப்பு கோரியதை தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.