இரவு நேர படப்பிடிப்புக்கு அனுமதி கேட்கும் அண்ணாத்த படக்குழு.!
ரஜினிக்கு ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.
By : Thangavelu
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா தொற்று காரணமாக அம்மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு மற்றும் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படப்பிடிப்பு சமீப காலமாக நடைபெற்று வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த உருவாகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில் ரஜினிக்கு ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.
இதனை தொடர்ந்து படக்குழு மீண்டும் ஐதராபாத் புறப்பட்டு சென்றது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போன்று அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தெலங்கானா மாநில அரசிடம் அனுமதி கேட்க அண்ணாத்த படக்குழு முடிவு செய்துள்ளது.