கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் தொடர்பு உண்டா? எய்ம்ஸ் ஆய்வு முடிவின் உண்மை?

கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்திய பின்பு சில திடீர் மரணங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வுகளில் திடீர் மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் இடையே நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்பது உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் செலுத்தப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் திறன் வாய்ந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த தடுப்பூசிகள் மிகவும் அரிதான பக்க விளைவுகள் கொண்டவை என்பதும் தெரியவந்துள்ளது.
திடீர் இதய நோய் இறப்புகள் என்பது மரபியல், வாழ்க்கை முறை, முன்பே இருக்கும் நோய்களால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள், கோவிட் பாதிப்புக்குப் பிந்தைய சில சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். குறிப்பாக 18 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, திடீரென ஏற்படக் கூடிய மரணங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள ஐசிஎம்ஆர் மற்றும் என்சிடிசி இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதை ஆராய, வெவ்வேறு ஆராய்ச்சி அணுகுமுறைகளைப் பயன்படுத்தி இரண்டு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன.
ஒன்று கடந்த கால தரவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. மற்றொன்று தற்போதைய சூழலை உள்ளடக்கி மேற்கொள்ளப் பட்டதாகும். ஐசிஎம்ஆர்-ன் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் நடத்திய முதல் ஆய்வு 2023 மே முதல் 2023 ஆகஸ்ட் வரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்டோபர் 2021 மற்றும் மார்ச் 2023 க்கு இடையில் திடீரென இறந்த நபர்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் தடுப்பூசியால் திடீர் மரண அபாயம் இல்லை என்பது உறுதியாகத் தெரிய வந்துள்ளது.