Kathir News
Begin typing your search above and press return to search.

#FactCheck தமிழக முதல்வரை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரம் ஒதுக்கவில்லையா? உண்மை என்ன?

#FactCheck தமிழக முதல்வரை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரம் ஒதுக்கவில்லையா? உண்மை என்ன?

#FactCheck தமிழக முதல்வரை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரம் ஒதுக்கவில்லையா? உண்மை என்ன?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2021 1:37 PM IST

நடுநிலை பத்திரிகையாளர்களாக தங்களை சமூக ஊடகங்களில் நிலைநிறுத்தி கொள்பவர்கள் அவ்வப்போது மத்திய அமைச்சர்கள் குறித்து போலி செய்தியை ட்விட்டரில் பதிவிடுவது வழக்கம். மத்திய அமைச்சர்களுக்கும் அமைச்சக ஊழியர்களுக்கும் இருக்கும் வேலை பழுவால் அந்த போலி செய்திகள் அமைச்சகத்தை சென்று சேருவது இல்லை. எனினும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் இந்த வகையான போலி செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளிச்சம் போட்டு காட்டி வந்துள்ளார். அந்த வகையில் இன்றும் அது போல சம்பவம் அரங்கேறியுள்ளது.

தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஒருவர், "மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்திக்க தமிழக முதல்வர் அவர்கள் கால அவகாசம் கோரி இருந்ததாகவும், ஆனால் அதற்கு மத்திய அமைச்சர் மறுத்துவிட்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

"மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க தமிழக முதல்வர் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது ஆனால் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகள் செல்வதால் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாது என நிர்மலா சீதாராமன் அலுவலகம் சார்பில் தெரிவித்து விட்டதாக தகவல். என்னவா இருக்கும்??" என்று அந்த 'நடுநிலை' பத்திரிக்கையாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சரின் அலுவலகம், "மாண்புமிகு தமிழக முதல்வர் சார்பில் நிதி அமைச்சரை சந்திக்க கால அவகாசம் கேட்டு எந்த கோரிக்கையும் இந்த அலுவலகத்தில் வைக்கப்படவில்லை. தவறான செய்தி", என்று விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து போலி செய்தியை தமிழக ஊடகங்கள் வெளியிடுவது இது முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டு, "நீட் தேர்வால் தான் மாணவர்கள் இறந்தார்களா?" என்று மத்திய அமைச்சர் கூறியதாக போலி செய்தி பரப்பப்பட்டது. அப்போதும் அந்த போலி செய்தியை சுட்டிக்காட்டினார் மத்திய அமைச்சர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் கடன் தள்ளுபடி விவகாரத்தில் போலி செய்தியை வெளியிட்டு பிறகு பகிரங்க மன்னிப்பு கேட்டது ஒரு செய்தி வலைத்தளம்.


ஊடகவியலாளர்களும் இது போல போலி செய்தியை பரப்புவது முதல் முறை அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், "பிஹாரில் 263 கோடி ரூபாய் செலவில் 8 ஆண்டுகளாக கட்டப்பட்ட பாலம் ஒன்று திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இடிந்து விழுந்திருக்கிறது", என்று ஊடகவியலாளர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவை போலி செய்தி என்று சுட்டிக்காட்டிய பிறகும் அந்த போலி செய்தியை இன்னமும் நீக்காமல் வைத்திருக்கிறார் அந்த ஊடகவியலாளர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News