இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர்: ராகுல் காந்தி சர்ச்சை கருத்துக்களை கூறினாரா?

"ஆபரேஷன் தொடக்கத்தின் போதே, பயங்கரவாதிகள் உட்கட்டமைப்பை தாக்கப் போகிறோம், ராணுவத்தை தாக்கப் போவது இல்லை. ராணுவம் விலகி இருக்கலாம் என பாகிஸ்தானுக்கு செய்தி அனுப்பினோம். ஆனால், அந்த அறிவுரையை அவர்கள் கேட்கவில்லை" என்று கடந்த மே 15-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறினார்.
இதனையடுத்து கடந்த மே 17-ம் தேதி ராகுல் காந்தி இதற்கு எதிராக பேசும் போது, ''நமது தாக்குதலின் தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தது ஒரு குற்றம். இந்திய அரசு அவ்வாறு செய்ததாக வெளியுறவு அமைச்சர் பொதுவெளியில் ஒப்புக் கொண்டுள்ளார். அவ்வாறு செய்ய யார் அனுமதி கொடுத்தது? அதன் விளைவாக நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது?'' என்ற கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இது குறித்து கடந்த வாரம் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்ட பிறகுதான், அதன் ஆரம்ப கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்ததாகவும் இது ஆபரேஷன் தொடங்குவதற்கு முன்பே தகவல் கொடுக்கப்பட்டதாக திரிக்கப்படுகிறது என்றும் கூறியிருந்தது.