வன்னி அரசு தீக்குளிக்க இருப்பதாக பரவி வரும் தகவல்! பின்னணியில் நடந்த உண்மை!
நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என வன்னி அரசு கூறியதாக பரவும் போலியான செய்தி
By : Muruganandham
வேளாண் சட்டங்களை போல நீட் தேர்வையும் ரத்து செய்யாவிட்டால் பாராளுமன்ற முன்பு தீக்குளிப்பேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏபிபி நாடு ஊடகத்தின் பெயரில் பகிரப்படும் இந்த நியூஸ் கார்டை, பலரும் உண்மை என்றே நம்பி பகிர்ந்து வருகின்றனர். அதில், பிரதமர் மோடியின் புகைப்படம் தனியாக எடிட் செய்து சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஏபிபி நாடு ஊடகத்தின் ஆசிரியர் மனோஜ் அந்த தகவல் உண்மை இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.
கடந்த நவம்பர் 18ம் தேதி வன்னி அரசு தொடர்பாக ஒரு நியூஸ் கார்டை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அதை எடிட் செய்து, தவறான தகவல் சேர்த்து வெளியிட்டுள்ளதாக கூறினார்.
நவம்பர் 18, 2021 அன்று ஏபிபி நாடு வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டில், வன்னி அரசு மற்றும் சீமான் ஆகியோரது படங்களை இணைத்து வெளியிடப்பட்டிருந்தது. அதில், "திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிச்சட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்? – வன்னியரசு, விசிக" என்று இருந்தது.
அதனை அப்படியே மாற்றி, சீமான் இருக்கும் இடத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்து, விஷமத்தனமான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதனை IFCNசர்வதேச அங்கீகாரம் பெற்ற factcrescendoஉறுதிபடுத்தியுள்ளது.