கொரோனாவிடம் இருந்து மக்களை காக்கும் தடுப்பூசி: சுகாதாரத்துறை வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!
By : Bharathi Latha
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனிடையே, மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நாளொன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.
இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,30,965 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,104 ஆக அதிகரித்துள்ளது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடும் மோசமாக உள்ளது. இந்த சூழலில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில், 13 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விபரம் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, நாட்டில் இதுவரை 13 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், கோவேக்சின் தடுப்பூசி 1.1 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதில், 93,56,436 பேருக்கு முதல் டோஸூம், 17,37,178 பேருக்கு 2வது டோஸூம் போடப்பட்டுள்ளது.
முதல் டோஸ் செலுத்தியவர்களில் 4,208 பேருக்கும், 2வது டோஸ் செலுத்தியவர்களில் 695 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. இதேபோல, இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் டோஸ் போட்டுக் கொண்ட 10,03,02,745 பேரில் 17,145 பேருக்கும், 2வது டோஸ் செலுத்திக் கொண்ட 1,57,32,754 பேரில் 5,014 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
அதாவது, கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 0.04 சதவீதம் பேருக்கு மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களில் 0.02 முதல் 0.03 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது உடல்நிலை சீராகவே இருப்பதாகவும், யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என மருத்துவ வல்லுநர்கள் கூறியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், உயிர்பலியில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை, சுகாதாரத்துறையின் விளக்கத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.