இந்த நிறுவன ஊழியர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: நிதித்துறை செயலாளர் வலியுறுத்தல்!

By : Bharathi Latha
இத்தகைய கடினமான சூழ்நிலைகளில் கூட காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை செய்துதான் வருகின்றார்கள். அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்னுரிமை அளிக்குமாறு நிதி அமைச்சகம் இன்று மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டது. இந்த கடினமான காலங்களில் அவர்கள் அதிக ஆபத்துக்களுக்கு ஆளாகிறார்கள் என்பதால் தற்போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
நிதி சேவைகள் துறை செயலாளர் டெபாசிஷ் பாண்டா கூறுகையில், "மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிதிச் சேவை வழங்குநர்களின் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக தடுப்பூசி போடுவதற்கு மாநிலங்கள் ஒரு சிறப்பு திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்" என்று கூறினார்.
இதைப்பற்றி டெபாசிஷ் பாண்டா ஒரு ட்வீட்டில் தெரிவிக்கையில், "இந்த சவாலான காலங்களில் தேவைப்படும் மக்களுக்கு தடையின்றி வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்குவதை உறுதிசெய்ததற்காக எங்கள் வங்கியாளர்கள், காப்பீட்டாளர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இந்த நிதித்துறை பிரிவில் சேவைகளை வழங்கும் ஊழியர்களில் பலர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களும் வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதில் தேவையான உதவிகளையும் ஆதரவையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார். முன்னுரிமையின் பேரில் அவர்களுக்கு தடுப்பூசி போடுவது பொது சேவையை வழங்குவதில் அதிக ஆபத்து ஏற்படுவதைக் குறைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
