கொரோனா தடுப்பூசி போட்டால் இது கிடைக்கும் - அரசு அதிகாரியின் புதிய முயற்சி!

By : Bharathi Latha
நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மக்களுக்கு தற்போது வரை தடுப்பூசியின் மீது ஒரு குழப்பமான சூழ்நிலையில் உள்ளவர்கள். குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை இன்னும் அறியாமல் இருக்கிறார்கள். குறிப்பாக கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுவது கிடையாது. இதே மாதிரி சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமம் உள்ள மக்கள் இதில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். அவற்றிற்கான தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்த அரசு அதிகாரி ஒருவர் புதிய முயற்சியை கையிலெடுத்துள்ளார்.
அருணாச்சல் பிரதேச மாநிலம் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள சிறிய மலைக் கிராமம் யலாலி. இங்கு மொத்தம் 12,000 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இவர்களில் 1,400 பேர் 45 வயதை கடந்தவர்கள். கொரோனா பரவலை தடுப்பதற்காக 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட போது, இந்த கிராம மக்கள் பெரும்பாலானோர் இதில் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து, வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணிகளை கிராம நிர்வாகம் மேற்கொண்டது.
இதன் விளைவாக, அவர்களில் 84 சதவீதம் பேருக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், 209 பேர் மட்டும் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தனர். இந்நிலையில், யலாலி வட்டாட்சியர் டாஷி வாங்சூ ஜூன் 7 முதல் 9ம் தேதி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்பொழுது நீண்ட வரிசையில் நின்று அந்த கிராம மக்கள் தடுப்பூசி செலுத்தினர். 45 வயதை கடந்தவர்கள் மட்டுமின்றி 18 வயதுக்கு மேற்பட்டோரும் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
