கொரோனா விதிமுறைகளை மீறினால் விளைவுகள் மோசமாகும் : மருத்துவர்கள் எச்சரிக்கை.!
By : Bharathi Latha
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் தற்போதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் மாநில அரசு சார்பில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. சந்தைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் நெருக்கமாக கூடி வரத்தொடங்கி உள்ளனர். ஆனால், மக்கள் கொரோனா கால வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் இரண்டாவது அலையை விட மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று மருத்துவர்கள் தற்போது எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மூத்த டாக்டர் சுரன்ஜித் சாட்டர்ஜி கூறுகையில், "கொரோனா கால பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என்றாலும், மீறல்கள் ஏற்பட்டாலும், பல்வேறு பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். மேலும் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தாவிட்டால் எங்களுக்கு மீண்டும் பிரச்சினைதான்" என்று குறிப்பிட்டுள்ளார். மக்கள் முக கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல், சட்டம் ஒழுங்கை அமல்படுத்துவோர் அவர்களுக்கு அபராதம் விதிக்கவில்லை என்றால், நாம் நிச்சயம் இரண்டாவது அலையை விட மோசமான நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள டெல்டா பிளஸ் உருமாற்ற கொரோனா வைரஸ் 3வது அலைக்கு அடித்தளமிடுமா? என்ற பயமும் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸ், தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தாக்கும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் 2வது அலை வெகுவாக குறைந்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் 3வது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர்கள் கூறியுள்ளார்கள். தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவக் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
