ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களால் தேசம் பெருமை கொள்கிறது : பிரதமரின் வாழ்த்து!

By : Bharathi Latha
2020 ல் நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் உலகளவில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இருப்பினும் 2021 ஆம் ஆண்டில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்தப் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய வீரர்கள் பலரும் உற்சாகமுடன் தங்களைத் தயார்படுத்தி வருகின்றார்கள். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் தனது வாழ்த்துக்களையும் தற்பொழுது தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஆக்கி அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது கேப்டன் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீரர் மன்பிரீத் சிங்கும், துணை கேப்டன்களாக பின்கள வீரர்கள் பிரேந்திர லக்ரா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஹாக்கி இந்தியா அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறுகையில், பல ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து நமது தேசம் பெருமிதம் கொள்கிறது. நமது குழுவினருக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் அவர்கள் கூறியுள்ளார்.
