குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை தீவிரம் : எய்ம்ஸ் இயக்குனர் தகவல்.!

By : Bharathi Latha
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உருவானால் அது குழந்தைகளை அதிகளவில் தாக்கலாம் என பல்வேறு தரப்பில் செய்திகள் கூறப்படும் நிலையில், குழந்தைகள் நலன் மீது அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா அவர்கள் தற்பொழுது தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு தான் வருகின்றன. மேலும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலோரியா தெரிவித்துள்ளார். மேலும், 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி தற்பொழுது, மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த கடந்த மே 12 ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்திருந்தது.
இதனால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள், குறிப்பாக அக்டோபரில் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக ரன்தீப் குலோரியா தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கோவாக்ஸினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் சேர்த்து பிற நிறுவனங்களும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் ரன்தீப் குலோரியா குறிப்பிட்டுள்ளார்.
