கேரளாவை குறிவைத்து தாக்கும் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ்கள்: காரணம் என்ன?

By : Bharathi Latha
இந்தியாவை தற்பொழுது கொரோனா இரண்டாவது அலை குறைந்து கொண்டு வருகின்றது. இருந்தாலும் சில மாநிலங்களில் மட்டும் இரண்டாவது அலை தாக்கம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. எனவே அத்தகைய மாநிலங்கள் தற்பொழுது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் தீவிர கண்காணிப்பில் இருந்து கொண்டுதான் வருகின்றது. அந்த வகையில் கேரளா மாநிலம் இன்னும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை குறையவில்லை. ஆனால் அதற்குள் தற்பொழுது புதிதாக ஜிகா வைரஸ் பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தின் அருகே, 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு ஜிகா வைரசால் பாதிப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, 15 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. எனவே தற்பொழுது கேரளாவில் அதிகரித்துவரும் ஜிகா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றாலும்கூட, மக்கள் அலட்சியமாக இருந்து விடவும் வேண்டாம் என்று மருத்துவ குழுவினர் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை சமூக நோயியல் துறை பேராசிரியர் காளிதாஸ் அவர்கள் கூறுகையில், "ஜிகா வைரஸ் ஏடீஸ் வகை பெண் கொசுக்கள் தான் பரப்புகின்றன. தற்போது மழைக் காலம் என்பதால், டயர், பிளாஸ்டிக் டிரம்கள், தொட்டிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நமது சுற்றுப்புறத்தில் கொசு ஒழிப்புக்கு புகை அடித்தல், மருந்து தெளித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். தற்போது காய்ச்சலுடன் வருபவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை, அதன்பின் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரு பாதிப்புகள் இல்லாதபோது, ஜிகா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. எனவே சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் இந்த வைரஸ் பாதிப்பை குறைக்கலாம்" என்று அவர் கூறினார்.
