"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மதம் மாற்றம் தடை சட்டத்தை திரும்ப பெறுவோம்" கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்டம்!
By : Dhivakar
"கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெறுவோம்" என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் சிவகுமார் கூறியுள்ளார்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் தன் ஆட்சி அதிகாரத்தை இழந்து, மக்களின் செல்வாக்கை பெற முடியாமல் தவித்து வருகிறது. இதை சரி செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்று கட்சியிலேயே பலர் குரல் எழுப்பி வருவதாக கூறப்படுகிறது.
இப்படி காங்கிரஸ் அழிவு நிலையில் இருக்கும் சமயத்தில், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சிவகுமார் "கர்நாடகாவில் பா.ஜ.க அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் திரும்பப் பெறுவோம்" என்று கூறியுள்ளார். அவரது கருத்துக்கு தற்போது பல தளங்களில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.
இதுகுறித்து கர்நாடக பா.ஜ.க வெளியிட்ட அறிக்கையில்: ஹிந்துக்களுக்கு காங்கிரஸ் எதிரி. ஹிந்துக்களை மதம் மாற்றம் செய்வதற்காகவே, ஒரு சட்டம் வகுப்பீர்களா?இந்த தடை சட்டத்துக்கு எதிராக சிவகுமார் கோபம் அடைந்துள்ளார்.ஹிந்துக்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டாலும் பரவாயில்லை என கூறும் உங்களுக்கு, மாநில மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். என்று கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
கட்டாய மதமாற்ற மோசடிகளை தடுக்கும் விதமாக பா.ஜ.க அரசு, கர்நாடகாவில் உன்னதமான கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை இயற்றியது. இதன் தாக்கம் கர்நாடகத்தில் பல இடங்களில் பிரதிபலித்து வருகிறது. "கர்நாடக பா.ஜ.க அரசு இயற்றியது போல், மற்ற மாநில அரசுகளும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என்று பல இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.