உதவித்தொகை கேட்டுச் சென்ற மாணவர்களை காவலாளிகள் தாக்கியதாக ஏ.பி.வி.பி குற்றச்சாட்டு!

By : Kathir Webdesk
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை விடுவிக்கக்கோரி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவலாளிகள் நடத்திய தாக்குதலில் 12-க்கும் அதிமான மாணவர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
ஜேஎன்யு ஏபிவிபி மாணவர் அமைப்பின் தலைவர், ரோஹித் குமார் கூறுகையிஸ், காலை 11 மணிக்கு ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் உதவித் தொகைகள் வழங்கும் துறைக்குச் சென்று அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித் தொகை குறித்து கேட்டுள்ளனர்.
அங்கிருந்த காவலாளிகள் மாணவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துள்ளனர். உதவித்தொகை வழங்குவதற்கான துறையில் 17 பேர் பணிபுரிந்த நிலையில், தற்போது 4 அலுவலர்களே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக தங்களுக்கான உதவித்தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
அலுவலர்கள் தவறாக நடந்து கொள்வதாகவும், சரியான தகவல்களை கூறாமல் பொய் சொல்வதாகவும், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கால அவகாசம் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினர். மேலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் வரை அலுவலகத்தை விட்டு நகரப்போவதில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வெளியான வீடியோ காட்சிகளில் மாணவர்கள் மீது பல்கலை காவலாளிகள் தாக்குதல் நடத்துவதும், தரையில் ரத்தத்துளிகள் இருப்பதும், சில கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது.
காயமடைந்த மாணவர்கள் சம்பவம் குறித்து விரைவில் டெல்லி காவல்துறையில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
