உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம்: குடியரசு தலைவர் உத்தரவு!

By : Bharathi Latha
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக N.V.ரமணா நியமனம் செய்து ஜனாதிபதி குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருபவர் எஸ்.ஏ. போப்டே. இவர் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். போப்டேவின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து,உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது? என்பது குறித்து பரிந்துரை அளிக்கும்படி தற்போதைய தலைமை நீதிபதியான போப்டேவிற்கு மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பினார். இதற்கு, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ராமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி போப்டே பரிந்துரை செய்து அனுப்பினார்.
போப்டேவுக்கு அடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர் N.V.ரமணா. ஆகவே, தலைமை நீதிபதி அவரை பரிந்துரை செய்தார். தற்போது பரிந்துரை ஏற்கப்பட்டு N.V.ரமணா உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
புதிதாக பதவியேற்க உள்ள N.V.ரமணா 2022 ஆகஸ்ட் மாதம் வரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த N.V.ரமணா 2014ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அங்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருந்தது.
அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீரில் இணையதள சேவை முடக்கப்பட்டதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வில் ரமணாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
