இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை: மருந்து பொருட்களை அனுப்பி வைக்க முடிவு செய்த மற்றொரு நாடு!

By : Bharathi Latha
நாட்டின் கொரோனாவின் பாதிப்புகள் பல மடங்கு உயர்ந்து உள்ளன குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது எனவே மருந்து பொருட்களும் தேவைகளும் தடுப்பூசிகளின் அளவும் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே இந்தியாவிற்கு ரெம்டெசிவிர் உள்பட பிற மருந்து பொருட்களை அனுப்பி வைக்க வங்காளதேசம் தயாராக உள்ளது.
நாட்டில் கொரோனாவின் முதல் அலையை விட 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. முதல் அலையில் அமெரிக்கா உள்பட பல உலக நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்தன. இதனால், அந்த நாடுகளுக்கு இந்தியா மருந்துகளை அனுப்பி உதவி செய்தது. இதற்கு ஐ.நா.சபையும் பாராட்டு தெரிவித்து இருந்தது.
பல உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன. இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில், அவர்களுக்கு தேவையான படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைக்காத சூழல் உள்ளது.
தொடர்ந்து உலக அளவில் அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என உறுதியளித்து இருந்தன.
அந்த வகையில் தற்போது ரெம்டெசிவிர் உள்பட அவசரகால தேவைக்கான மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பிற மருந்து பொருட்களை அடுத்த வாரம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வங்காளதேச அரசு முடிவு செய்துள்ளது.
இதுபற்றி அந்நாட்டு வெளியுறவு செயலாளர் மசூத் பின் மோமென் கூறும்பொழுது, "இந்தியா எங்களிடம் ரெம்டெசிவிர் மருந்துகளை கேட்டிருந்தது. அதனை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து இருக்கிறோம் என கூறியுள்ளார். அவசரத் தேவைக்கு உதவியாக பல மருந்து பொருட்கள் ஆகியவை ஆயிரக்கணக்கில் அனுப்பி வைக்கப்படும்" என அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.
