விஞ்ஞானிகள் எச்சரிக்கை : இந்த மாதங்களில் உச்சத்தை தொடும் கொரோனா 3-வது அலை!

By : Bharathi Latha
இந்தியாவில் தற்பொழுது கொரோனா நிலைமைகளைப் பற்றி அறிவதற்காக மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் 2020ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழு கொரோனா 3வது அலை பாதிப்பு குறித்து தற்போது கணித்துள்ளது. கொரோனா 3வது அலை அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும் என மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக நோய் எதிர்ப்பு திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு, புதிய உருமாறிய கொரோனா வகைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப் பட்டுள்ளது. இரண்டாவது அலை தாக்க முன்கணிப்பின்போது இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தும்போது, கொரோனாவின் மூன்றாம் அல்லது நான்காம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று அந்தக் குழு கூறியுள்ளது.
மூன்றாவது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது அலை பாதிப்பு அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனில், மூன்றாம் அலையின்போது தினசரி பாதிப்புகள் எண்ணிக்கையும் அதிகமான அளவுக்கு உயர வாய்ப்புள்ளது என்று அந்தக் குழு எச்சரித்துள்ளது.
