Kathir News
Begin typing your search above and press return to search.

பலம் பெறும் இந்திய விமானப்படை: மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்!

பலம் பெறும் இந்திய விமானப்படை: மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 April 2021 11:28 AM GMT

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்ததை அடுத்து விமானப்படையில் மொத்த ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் ரூ.56 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் 2016ல் கையெழுத்தானது. இதன்படி, ஏற்கனவே 11 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.


கிழக்கு லடாக்கில் சீனாவுடன் சமீபத்தில் போர் பதற்றம் ஏற்பட்ட போது, இந்த விமானங்கள் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி மேலும் 3 ரபேல் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்துள்ளது. இந்த விமானங்கள் பிரான்சில் இருந்து புறப்பட்டு, வழியில் எங்கும் நிற்காமல் நேரடியாக இந்தியா வந்து சேர்ந்துள்ளன. 3 விமானங்களும் அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக இந்திய விமானப்படை தரப்பில் வெளியான டுவிட்டர் பதிவில், 'பிரான்சில் இருந்து 3 ரபேல் விமானங்கள் நடுவழியில் எங்கும் நிற்காமல் புதன்கிழமை மாலை இந்தியா வந்தடைந்தன. அந்த விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக விமானப் படை விமானங்கள் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த 3 விமானங்களுடன் சேர்த்து நம் விமானப் படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இது தவிர, மேலும் 7 ரபேல் விமானங்கள் இந்த மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இவை வந்து சேர்ந்த பிறகு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹசிமரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன. இதன்மூலம், இந்த மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 21 ஆக உயரும்.


மீதமுள்ள விமானங்களும் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம், இந்தியாவிடம் விமானப்படை பெரும் பலத்தை பெறும். ரபேல் போர் விமானங்களில் மெட்டர் எனப்படும் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவை, விமானம் பறக்கும் போதே எதிரி விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் படைத்தவை. இது தவிர, ரபேல் பறந்து கொண்டிருக்கும் போது தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஹம்மர் என்ற ஏவுகணையும் பொருத்தப்பட்டு உள்ளன. ரபேல் விமானங்கள் மட்டுமின்றி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் 114 இலகு ரக போர் விமானங்களும் விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News