பற்றாக்குறை இல்லாத அளவுக்கு 3.09 கோடி தடுப்பூசிகளின் கையிருப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்!
By : Bharathi Latha
இந்தியாவில் நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக 18 வயது மேற்பட்டவர்கள் அதிகமாக தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள். எனவே மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்து விழிப்புணர்வு மூலம் தடுப்பூசிகளின் தேவையும் தற்போது அதிகரித்து உள்ளது. எனவே மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளின் கையிருப்பு வழங்க வேண்டிய முழு பொறுப்பையும் மத்திய அரசு ஏற்றுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு ஏற்கனவே பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அந்த வகையில் தற்போது ஒவ்வொரு மாநிலங்களின் கையிருப்பில் 3.09 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், "தற்போது நாடு முழுவதும் ஜூன் 21-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக இதுவரை 45,37,70,580 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன. அதில், 42,28,59,270 தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டு உள்ளன.
மாநிலங்களில் கையிருப்பில் தற்போது 3,09,11,310 தடுப்பூசிகள் உள்ளன. மேலும் 59,39,010 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 43,51,96,001 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.