ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்களும் அரசு பணியில் தேர்ச்சி: சாதித்த விவசாய குடும்பம்!

By : Bharathi Latha
விவசாய குடும்பத்தில் பிறந்த அனைவருக்கும் அரசு பணி என்பது ஒரு எட்டாத கனியாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் என்றால், அரசு பணிகளில் சேருவதற்கு பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும். தற்பொழுது இந்த தடைகளை எல்லாம் மீறி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் அரசு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ராஜஸ்தானில் ஒரு விவசாயியின் இருமகள்கள் அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் இருந்து வரும் நிலையில், அவரது கடைசி 3 மகள்கள் தற்பொழுது தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சாதேவ் சஹாரன் என்பவருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள்களான ரோமா மற்றும் மஞ்சு ஆகியோர் RAS தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் இருந்து வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு நடந்த RAS தேர்வை விவசாயி சஹாரனின் கடைசி மூன்று மகள்களான அன்ஷு, ரீது மற்றும் சுமன் ஆகியோரும் எழுதினர். இந்த நிலையில், இந்தத் தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது.
அதில், அவரது மூன்று மகள்களும் தேர்ச்சி பெற்று விவசாயியான தனது தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அரசுப் பணிக்கான தேர்வில் சகோதரிகள் 3 பேரும் தேர்ச்சி பெற்றதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்களும் அரசுத் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணியாற்ற இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க ஒரு நிகழ்வாகும். இதனிடையே, சகோதரிகள் மூவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
