சுய உதவி குழுக்களின் தயாரிப்பை விமானம் நிலையம் வரை கொண்டு வரும் அசத்தல் "அவ்சர்" திட்டம்!
'AVSAR' to provide SHGs an opportunity to showcase local products
By : Kathir Webdesk
பெண்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்குவதற்குமான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, சுய உதவி குழுக்களுக்கு இடம் ஒதுக்கும் முயற்சியை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டுள்ளது.
பிராந்தியத்தில் சுயமாக தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை விற்பதற்காக அவ்சர் (பிராந்தியத்தின் திறமையான கைவினைஞர்களுக்கான இடமாக விமான நிலையம்) திட்டத்தின் கீழ் இடம் வழங்கப்படுகிறது.
இந்திய விமான நிலைய ஆணையம் இயக்கும் விமான நிலையங்களில் 100-200 சதுர அடி பரப்பளவு இந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சுயஉதவி குழுக்களுக்கு சுழற்சியின் அடிப்படையில் 15 நாட்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.
சென்னை, அகர்தலா, டேராடூன், குஷிநகர், உதய்பூர் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்களில் உள்ளூர் பெண்களால் இயக்கப்படும் விற்பனை நிலையங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட உள்ளூர் உணவுகள், மூங்கில் பொருட்கள், கலைப்பொருட்கள், பாரம்பரிய கைவினைப்பொருட்கள், இயற்கை சாயங்கள், எம்பிராய்டரி மற்றும் உள்நாட்டு நெசவுகள் உள்ளிட்டவற்றை காட்சிப் படுத்துகின்றன.
மேலும் ராஞ்சி, கொல்கத்தா, வாரணாசி, இந்தூர், போபால், வதோதரா, ராஞ்சி, பெலகாவி, மதுரை, கோயம்புத்தூர், கோழிக்கோடு, சூரத், புவனேஸ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்கள் சுயஉதவி குழுக்களுக்கு மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து இடம் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
சுய உதவிக்குழுக்களை வலுப்படுத்துவதற்கான சூழலை அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. சுயஉதவி குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் விமானநிலைய ஆணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டு, குழுக்கள் அமைந்துள்ள குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் இடம் ஒதுக்கப்படும்.
ஆர்வமுள்ள சுய உதவிக்குழுக்கள் https://www.aai.aero/en/node/add/shg-user-detail எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.