கர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை.!
பசவராஜ் பொம்மை கர்நாடகா மாநிலத்தின் 24வது முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.
By : Thangavelu
கர்நாடகா மாநிலத்தின் 24வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை 61, பதவியேற்றுக்கொண்டார்.
கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா இருந்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் பணியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டனர்.
அதன்படி கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உடனான ஆலோசனையில், வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எடியூரப்பாவின் ஆதரவு இருக்கிறது. இதனால் கட்சி மேலிடம் அவரையே தேர்வு செய்தது.
இதனிடையே நேற்று இரவு 7.30 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு சென்று பசவராஜ் பொம்மை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி இன்று பதவியேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இன்று பகல் 11:00 மணிக்கு பசவராஜ் பொம்மை கர்நாடகா மாநிலத்தின் 24வது முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்றதை தொடர்ந்து எடியூரப்பா மற்றும் ஆளுநர் பூங்கொத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த 1988ம் ஆண்டு பதவி வகித்துள்ளார். இரண்டு முறை எம்.பி.யாகவும், தேவகவுடா பிரதமராக இருந்த காலத்தில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.