சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறையாக நடைபாதை வியாபாரிகளுக்கு பிணையின்றி கடன்.!
சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறையாக நடைபாதை வியாபாரிகளுக்கு பிணையின்றி கடன்.!

By : Kathir Webdesk
முன்பெல்லாம் மாத ஊதியம் பெறுபவர்கள் கூட கடனுக்காக வங்கிகளை அணுக முடியாத நிலை இருந்ததாகவும், ஏழை மக்களும், தெருவோர வியாபாரிகளும் வங்கிகளை அணுகுவதை எண்ணிக்கூட பார்க்க முடியாது என்று பிரதமர் கூறினார். ஆனால் இப்போது, மக்கள் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு கடன் வழங்க அவர்களது வீடு தேடி வங்கிகள் வருவதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவிய நிலையில், தொழிலாளர்கள் எவ்வாறு இதைச் சமாளிப்பார்கள் என்று மற்ற நாடுகள் கவலைப்பட்ட போது, எந்த சவாலையும் எதிர்த்து முறியடித்து வெற்றி பெற முடியும் என்று நமது தொழிலாளர்கள் நிரூபித்ததாக கூறினார்.
பெருந்தொற்று காலத்தில் ஏழை மக்களின் பாதிப்பைக் குறைக்கும் வகையில், கரீப் கல்யாண் யோஜனா என்னும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் தொகுப்புத் திட்டத்தை அரசு தொடங்கியதை அவர் சுட்டிக்காட்டினார். ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்புத் திட்டமும் ஏழைகளைக் கவனத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்கி, தன்னிறைவு பெற முடியும் என்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரவித்தார்.
நாடு முழுவதும் இந்தத் திட்டம் வேகமாக நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து மோடி பாராட்டு தெரிவித்தார். ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு யாரும் உத்தரவாதம் அளிக்கத் தேவையில்லை என கூறினார். கடன் பெற விரும்புவர், ஆன்லைன் வாயிலாக பொது சேவை மையம் அல்லது நகராட்சி அலுவலகம் அல்லது வங்கிக்குச் சென்று விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் .
சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறையாக தெருவோர வியாபாரிகள், உத்தரவாதம், பிணை ஏதுமின்றி கடன் பெற்று வருகின்றனர் என பிரதமர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பெறப்பட்ட 25 லட்சம் கடன் விண்ணப்பங்கள் வந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கடன் வழங்கப்பட்ட தெருவோர வியாபாரிகளில் பெரும்பாலோனர் சரியான நேரத்தில் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தி வருகின்றனர் எனக்கூறிய அவர், சிறு கடன் பெறுவோர் தங்கள் நேர்மையிலும் உண்மைத்தன்மையிலும் சமரசம் செய்து கொள்ளமாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் குறித்து இயன்றவரை அதிகமான நபர்களிடம் விழிப்புணர்வைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ், உரிய நேரத்தில் முறையாக தவணையை திருப்பிச் செலுத்துபவர்களுக்கு 7 சதவீத வட்டி தள்ளுபடி உள்ளது என்றும், டிஜிடல் பரிவர்த்தனைகளுக்கு மாதத்திற்கு ரூ.100 வீதம் பணப்பயன் வசதியும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
