புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து.!
அதிக எண்ணிக்கையிலான பெண்களையும் உள்ளடக்கிய இந்த அமைச்சரவை மக்கள் பணியில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

By : Thangavelu
பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று இரவு புதிதாக 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே பதவி ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், ஆளுநர்கள், அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிதாக 15 கேபினட் மத்திய அமைச்சர்களும், 28 இணை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான வழிகாட்டுதலின்படி, மத்திய அமைச்சர்களாக புதிதாகப் பதவி ஏற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நம் பாரதத் திருநாடு, உலக அரங்கில் பீடுநடை போடுவதற்கும் நம் தாய்த் திருநாட்டின் பெருமையை உயர்த்துவதற்கும் நம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் ஒவ்வொரு கடைகோடி இந்தியருக்கும் கிடைப்பதற்கும் இந்த அமைச்சரவை செயலாற்றும் என்பது உறுதி.
அதிக எண்ணிக்கையிலான பெண்களையும் உள்ளடக்கிய இந்த அமைச்சரவை மக்கள் பணியில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
