மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டதா? அட போங்கப்பா! ஆன்லைன் விற்பனை மட்டுமே 54 ஆயிரம் கோடி ரூபாய்!
மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டதா? அட போங்கப்பா! ஆன்லைன் விற்பனை மட்டுமே 54 ஆயிரம் கோடி ரூபாய்!

By : Muruganandham M
கொரோனா தாக்கம் காரணமாக மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் எதிர்மறையாக தகவல் பரப்பப்பட்டு வரும் நிலையில், கடந்த அக்டோபர் 10 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 15 ஆம் தேதி வரையில் ஆன்லைன் சந்தைகளில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை கிட்டத்தட்ட 7.3 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் எட்டியுள்ளன.
இதனை இந்திய மதிப்பில் கணக்கிட்டு பார்த்தால் 54 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனை செய்துள்ளள. தீபாவளி பண்டிகை காலத்தில், முன்னர் மதிப்பிடப்பட்டதை விட, இருபது சதவிகிதம் அதிகமான விற்பனையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்ஸீர் என்ற நிறுவனம் சந்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, மக்கள் பெரிய கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதை காட்டிலும் ஆன்லைனில் பொருட்கள் வாங்க விரும்புகின்றனர். நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்குவதில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக ரெட்ஸீர் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த தீபாவளி விற்பனையின் போது, வழக்கமாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களை காட்டிலும் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 10 ஆர்டர்களிலும் நான்கு ஆர்டர்கள் முதல் முறையாக ஆன்லைன் பயன்படுத்துவோரிடமிருந்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த தீபாவளி ஆன்லைன் விற்பனை முழுக்க இரு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் மட்டுமே இருந்துள்ளது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ஆன்லைன் சந்தை மொத்த விற்பனையில் 88 சதவிகிதத்தை எட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
