ஒத்திவைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பதவிக்கு ஆகஸ்ட் 2ம் தேதி நேர்காணல்.!
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான நேர்காணல் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என்று யு.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான நேர்காணல் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என்று யு.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் 4.5 லட்சம் பேர் முதல் நிலை தேர்வு எழுதினர். நாடு முழுவதும் சுமார் 10,564 பேர் தேர்ச்சி பெற்றனர். அதே போன்று இவர்களுக்கு மெயின் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 5 நாட்கள் நடைபெற்றது.
இதனிடையே, இவர்களுக்கான நேர்காணல் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி தொடங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக தேர்வு நடைபெறவில்லை. தேர்வு தேதியும் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நேர்காணல் தேதியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்க உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் 22ம் தேதி வரை நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது.