EPFO அமைப்பில் இருந்து 30,800 நிறுவனங்கள் வெளியேறியதா? உண்மை என்ன?
EPFO அமைப்பில் இருந்து 30,800 நிறுவனங்கள் வெளியேறியதா? உண்மை என்ன?

By : Rama Subbaiah
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இபிஎஃப்ஓ எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு , 2020 நவம்பர் 18 அன்று, “இபிஎஃப்ஓ-வின் சந்தாதாரர்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் குறைந்துள்ளது” என்னும் தலைப்பில் ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இபிஎஃப்ஓ, இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இபிஎப்ஓ நிறுவனத்திலிருந்து அக்டோபர் மாதம் 30,800 நிறுவனங்கள் வெளியேறி இருப்பதாகவும், இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் கடந்த மாதத்தைவிட குறைந்து 1.8 மில்லியனாக உள்ளதாகவும் அந்த ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள தரவுகள் தவறானவை என்றும் அவை இபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ தகவல்கள் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இபிஎப்ஓ நிறுவனத்தின் சந்தாதாரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கையை அந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 20-ஆம் தேதி வெளியிடும்.
2020 அக்டோபர் 20 அன்று வெளியிடப்பட்ட இபிஎப்ஓ நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிக்கையின்படி ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களைத் தவிர ஆகஸ்ட் வரையிலான இதர மாதங்களில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கை நாளை தான் வெளியிடப்படும் என்றும் இபிஎஃப்ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது.
