காஷ்மீரி இளைஞர்களுக்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லையாம் முப்தி சர்ச்சைப் பேச்சு.!
காஷ்மீரி இளைஞர்களுக்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லையாம் முப்தி சர்ச்சைப் பேச்சு.!

By : Yendhizhai Krishnan
காஷ்மீர் கொடியை ஏற்றாமல் இந்தியக் கொடியைக் கையில் எடுக்க மாட்டேன் என்று பேசி சில நாட்களுக்கு முன்பு சர்ச்சையை ஏற்படுத்திய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, காஷ்மீர் இளைஞர்களுக்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசி தற்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.
காஷ்மீருக்கு இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து வேறுபட்டு சிறப்பு உரிமைகள் அளித்த 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவை நீக்கி, அமைதியை நிலைநாட்ட காஷ்மீர் அரசியல்வாதிகளை வீட்டுச் சிறையில் வைத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வரிசையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு அரசியலமைப்பு பிரிவு 370ஐ நீக்கிவிட்டு காஷ்மீரை இரண்டாகப் பிரித்ததில் இருந்து தீவிரவாதம் அதிகரித்து வருவதாக கூறியிருக்கிறார்.
இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 10 முதல் 15 இளைஞர்கள் கூட்டாக தீவிரவாத குழுக்களில் இணைவதாகவும் மக்களின் குரல் நசுக்கப்படுவதாலேயே இளைஞர்கள் தீவிரவாதத்தை தேர்ந்தெடுப்பதாகவும் கூறியுள்ளார்.
"மக்களின் குரல் கொடுக்கப்பட்டதால் அவர்களுக்கு வேறு வழி இல்லை இளைஞர்கள் தங்களுக்கு இரண்டே வழிகள் தான் இருப்பதாக நினைக்கிறார்கள் ஒன்று சிறைக்கு போவது இன்னொன்று ஆயுதத்தை கையில் எடுப்பது எனவே ஆயுதமேந்தி இறப்பதே மேல் என்று அவர்கள் நினைக்கிறார்கள்"என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார்.மேலும் பாகிஸ்தானுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.
சீனாவிடம் நாம் தொடர்ந்து நமது நிலப்பகுதியை திருப்பித் தருமாறு கெஞ்சி வருவதாகவும் அவ்வாறு இருக்கும்போது பாகிஸ்தானுடன் மட்டும் ஏன் பேசக்கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தீவிரவாதத்தை கைவிட்டால் தான் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்திய அரசு கூறிய பின்னும் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை அனுப்பி வரும் பாகிஸ்தானுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டுமென்று முப்தி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
