கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார்.!
இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கர்நாடக முதலமைச்சராக பரசவராஜ் பொம்மை மற்றும் அவருடன் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
By : Thangavelu
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் எடியூரப்பா. இவர் பாஜக நிர்ணயித்த வயதை கடந்து பதவியில் இருந்த நிலையில் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக யார் என்ற எதிர்பார்ப்பு பாஜக மட்டுமின்றி கர்நாடக மக்களிடையே ஏற்பட்டது.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன்ரெட்டி, தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த (சட்டசபை குழு தலைவராக) முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை முறைப்படி எடியூரப்பா அறிவித்தார். அதனை தொடர்ந்து எடியூரப்பா காலில் விழுந்து பசவராஜ் பொம்சை ஆசிர்வாதம் வாங்கினார். இதனை தொடர்ந்து பசவராஜ் பொம்மை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் தாவர்சந்த் கெலாட், ஆட்சி அமைப்பதற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கர்நாடக முதலமைச்சராக பரசவராஜ் பொம்மை மற்றும் அவருடன் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.