இனி வழக்குகள் நிலுவை என்ற பேச்சுக்கே இடமில்லை - 15 மாநிலங்களில் 2.51 லட்சம் வழக்குகளுக்கு அதிரடி தீர்வு.!
இனி வழக்குகள் நிலுவை என்ற பேச்சுக்கே இடமில்லை - 15 மாநிலங்களில் 2.51 லட்சம் வழக்குகளுக்கு அதிரடி தீர்வு.!
![இனி வழக்குகள் நிலுவை என்ற பேச்சுக்கே இடமில்லை - 15 மாநிலங்களில் 2.51 லட்சம் வழக்குகளுக்கு அதிரடி தீர்வு.! இனி வழக்குகள் நிலுவை என்ற பேச்சுக்கே இடமில்லை - 15 மாநிலங்களில் 2.51 லட்சம் வழக்குகளுக்கு அதிரடி தீர்வு.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/53ec237685d3a223c639189d1e52125f.jpg)
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை 15 மாநிலங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட 27 லோக் அதாலத் மூலம் 2.51 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்றம் எனப்படும் ‘லோக் அதாலத்’ நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த லோக் அதாலத், காணொலி முறையில் நடத்தப்பட்டது. இது இ-லோக் அதாலத் என அழைக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை 15 மாநிலங்களில் 27 இ-லோக் அதலாத் நடத்தப்பட்டது. மொத்தம் 4.83 லட்சம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 2.51 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
இதன் விளைவாக, ரூ.1409 கோடி அளவுக்கு தீர்வு தொகை அளிக்கப்பட்டது. மேலும், நவம்பர் மாதத்தில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட இ-லோக் அதாலத்தில் 16,651 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 12,686 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.107.4 கோடி அளவுக்கு தீர்வு தொகை வழங்கப்பட்டது.
இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் கோர்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமல்லாமல் கோர்ட்டுக்கு வர இருக்கும் தாவாக்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம். இங்கு தீர்வுகாணப்பட்டால் அதற்குமேல் மேல்முறையீட்டிற்குப் போக முடியாது.
காசோலை தொடர்பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளத் தன்மையுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி தொடர்பான பிரச்னைகள் இதில் தீர்த்துவைக்கப்படும்.