அபூர்வ கறுஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்த போட்டோகிராஃபர்!
அபூர்வ கறுஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்த போட்டோகிராஃபர்!
![அபூர்வ கறுஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்த போட்டோகிராஃபர்! அபூர்வ கறுஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்த போட்டோகிராஃபர்!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/0adfc47fb08d00dbcb22d7e842efcee5.jpeg)
மஹாராஷ்டிராவில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில், ஆபூர்வ கறுஞ் சிறுத்தை ஒன்று, மானை வேட்டையாட தயார் நிலையில் இருந்தது. இதனை போட்டோகிராபர் ஒருவர் புகைப்படம் எடுக்க அது வைரலாகி உள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அனுராக் கவாண்டே என்ற புகைப்படக் கலைஞர், மஹாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள டடோபா அந்தாரி தேசிய உயிரியல் பூங்காவிற்கு தனது தாய் மற்றும் சகோதரருடன் சபாரி ஒன்றில் சென்றிருக்கிறார். அப்போது மானை வேட்டையாட தயார் நிலையில் இருந்து மெலனிஸ்டிக் எனப்படும் அபூர்வ கறுஞ் சிறுத்தை ஒன்றை கண்டார். அடுத்த நொடி, தனது கேமரா வீடியோ மற்றும் போட்டோ எடுக்க துவங்கியிருக்கிறார்.
முதலில் வாகனத்தின் சத்தத்தை கேட்டு பயந்து புதருக்குள் ஒளிந்திருக்கிறது. பின் மெல்ல வெளி வந்து சாலையை கடந்து செல்கிறது. அது மான் ஒன்றை வேட்டையாடியதாக அனுராக் தெரிவித்துள்ளார்.
‘நீங்கள் அதை வெறும் கண்களால் காணும் போது அதன் கோடுகள் தெரியாமல், முழுவதும் கறுப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. இந்த நிகழ்வு, ஒரு நிமிடம் மட்டுமே நீடித்தாலும், என் வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணமாக அமைந்து விட்டது’ என்கிறார் அனுராக்.
அனுராக் எடுத்த அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. வீடியோவும் மைக்ரோ பிளாக்கிங் தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் இந்த 24 வயது இளைஞர், இத்துறையில் 4 ஆண்டுகளாக இருந்து வருகிறார். மேலும் புகைப்படம் எடுப்பது குறித்து மக்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.